Sunday, May 19, 2024
HomeLatest Newsஆர்ப்பாட்டக்காரர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை

வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாது போக்குவரத்துகளை தடையின்றி மேற்கொள்ள உதவுமாறு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் (IGP) வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவம் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடையின்றி செல்வதற்கு இராணுவ மற்றும் பிற படைகளை அனுப்பியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற அமைதியான போராட்டங்களுக்கு இன்று வரை எந்த இடையூறும் நாங்கள் ஏற்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக அவ்விடங்களில் தோன்றிய சில குறைபாடுகள், குறிப்பாக வீதியின் போக்குவரத்தை மறித்து, பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதைக் காணமுடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபரின் (IGP) வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம், குறிப்பாக நேற்று முதல் போக்குவரத்து இயக்கங்கள் தடையின்றி செல்வதற்காக, இது தொடர்பில் இராணுவத் துருப்புக்களையும் ஏனைய படைகளையும் அனுப்பியுள்ளது.

சில பொது மக்கள் முன்வந்து அந்த தடைகளை தாங்களாகவே அகற்ற முன்வருவதைக் கண்டோம், அதற்காக நாங்கள் அத்தகைய தன்னார்வலர்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் கடந்த காலங்களில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் அனைவரும் ஆயுதப்படைகளுடன் ஒத்துழைத்ததைப் போலவே எங்கள் படைகளுக்கும் பொலிஸாருக்கும் ஆதரவளிக்குமாறு அனைத்து புத்திசாலித்தனமான இலங்கையர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

வீதித் தடைகள் மற்றும் பிற தடைகளை நீக்கி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனைத்து ஆயுதப் படைகள் மற்றும் பொலிஸாருக்கு இந்த முக்கியமான தருணத்தில் அனைத்து இலங்கையர்களும் ஒரே மாதிரியான ஆதரவை வழங்குமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recent News