Saturday, April 27, 2024

இந்திய ரஷ்ய உறவு: அமெரிக்காவுக்கு ஆப்பு

உலக  ஜனநாயக இராஜதந்திர நகர்வுகளில் பல விடயங்கள் உடனே புரியாவிட்டாலும் கால ஓட்டத்திலே சம்பவங்களாக அவை புரிய வைக்கப்பட்டு வருகின்றன.

இராஜதந்திர நகர்வுகள் என்று சொல்லுகின்ற போது நேரடியாக ஒரு கருத்தை முன் வைத்து அந்த கருத்தை மறைமுகமாக வேறொரு விதத்தில் நடைமுறைப்படுத்துவதாக அமைந்து இருப்பதையே குறிக்கும் என இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனொளியில் உலகில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் முரண்பாடுகள் மற்றும் போர்களுக்கு மத்தியில் இந்தியா என்றும் ஒரு மறைமுகமாக உலக அதிபதி நாடுகளுக்கு கெடி கலகத்தை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் நோட்டோ போன்ற பெரிய உறுப்புரிமைகளை கொண்ட அமைப்புக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ரஷ்யாவுடன் இந்தியாவின் உறவு நிலை அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையானது மேற்படி கெடிக் கலக்கத்திற்கு ஊற்றுக் காரணமாகும். இன்றைய ஆய்வில் நாம் மேற்படி நிலைமை குறித்து பார்க்க இருக்கின்றோம்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் தற்போது காணப்படுகின்ற உறவு நிலையானது திடீரென ஏற்பட்ட அல்லது உருவாகிய ஒன்று அல்ல இது 20ம் நூற்றாண்டிலேயே மேற்படி இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு நிலை சமநிலையில் காணப்பட்டதாகவும் அது இன்று தேவையான சந்தர்ப்பத்தில் கைகொடுக்கின்றதாக இருப்பதாக இந்திய ஆய்வாளர் தெரிவித்த கருத்து இங்கே முக்கியம் பெறுகின்றது.

ரஷ்ய உக்ரைன் போர் கடும் உச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியாவின் மேல் பல நாடுகளின் கண்கள் பதியப்பட்டிருக்கின்றமையானது இந்தியாவின் இராஜதந்திர நகர்வு புதுமையானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவை அனைத்து மேற்குலக நாடுகளும் ஏதோ ஒரு தடையினை விதித்து எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தியா எந்த தடைகளையும் பிரயோகிக்காது மாறாக இராணுவ ஆயுத பரிமாற்றங்களையும் எரிபொருள் பரிமாற்றங்களையும் மேற்கொண்டு வருவதானது மேற்கு நாடுகளின் வயிற்றில் நெருப்பை கொட்டிக் கொண்டு இருக்கின்றது என்பது வெளிப்படும் உண்மை.

ஐக்கிய நாடுகள் சபையிலே இரண்டு முறை இடம் பெற்ற ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்புக்களிலும் இந்தியா கலந்து கொள்ளாது விலகியிருந்தமை இந்தியா ரஷ்யாவின் கைப்புள்ளை என்ற கருத்தை மேற்கு நாடுகளிடம் விதைத்திருந்தது. ஆனால் இந்தியாவின் விலகலுக்கான காரணத்தை இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெளிவாக முன்வைத்திருக்கின்றார்.

“இந்தியா எந்த நாட்டினதும் கைப்பொம்மையோ அல்லது கூலியோ அல்ல. இந்தியா எல்லா நாடுகளுடனும் நல்லுறவினை பேணி வருகின்றது. 1947ம் ஆண்டில் இந்திய பாக்கிஸ்தான் பிரிவிற்குப் பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் நேட்டோ அதிகாரத்தை ரஷ்யா பயன்படுத்தி இந்தியாவை ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்பில் இருந்து பாதுகாத்திருந்தது.

இந்தியா பாக்கிஸ்தான் நடுகளுக்கிடையே இது வரை மூன்று பெரிய போர்கள் காஷ்மீரை மையப்படுத்தி நடை பெற்றிருக்கின்ற நிலையில் இன்றும் மேற்படி பிரதேசம் குழப்பமான பிரதேசமாகவே காணப்படுகின்றது. இரண்டு தரப்புக்களும் போர் ஆயத்தங்களுடன் காத்திருப்பதாகவும் எல்லைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

1971ம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷிற்கு இடைப்பட்ட எல்லைப் பிரேசத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தை பின்வாங்குமறு ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அப்போதிருந்த சோவியத் யூனியன் தனது நேட்டோ அதிகாரத்தையும் மொஸ்கோ அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையுடன் கிட்டத்தட்ட ஆறிற்கு மேற்பட்ட தடவைகள் சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை இந்தியாவிற்காக பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனுடன் பனிப் போர் காலத்தில் ரஷ்யாவின் ஆலோசகராக இந்தியா செயற்பட்டு அமெரிக்க மற்றும் பாக்கிஸ்தானின் இராஜதந்திரங்களை முறியடிக்க ரஷ்யாவிற்கு உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டுமன்றி இந்திய மற்றும் சீன எல்லை பிரச்சனைகளின் போதும் ரஷ்யா பெரும்பாலும் இந்தியாவின் பக்கமே இருந்ததாகவும் ஒரு சில வேளைகளில் மாத்திரம் நடுநிலை வகித்திருந்தாகவும் கூறப்படுகின்றது.

இந்தியா சீனாவுடன் சுமார் 3,500 கிலோ மீற்றர் நீளமான எல்லைப் பாதையை கடந்த 80 ஆண்டுகளாக பகிர்ந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் மத்தியில் இமாலய பிரதேசத்தில் சீன மக்கள் விடுதலைப் படை இந்தியாவுடன் முரண்படுகின்ற போதெல்லாம் இந்தியாவுக்கு ஆதரவு கரம் நீட்டுவது ரஷ்யா என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் ரஷ்யா இந்தியாவிற்கு கரம் கொடுத்த சில சந்தர்ப்பங்கள் என்பதுடன் இந்தியா கடந்த சில ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இராணுவ தளபாடங்களை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்திருந்தமையும் மிக அண்மையில் S-400 ஏவுகணைகளை பெற்றுக் கொண்டமையும் சுமார் 60%-70% வரையான இராணுவ ரீதியான பரிமாற்றங்களை இந்தியா ரஷ்யாவுடன் மேற்கொண்டிருப்பதானது உறுதியான இரு நாட்டு உறவு நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான உறவின் உறுதித் தன்மை குறித்து கருத்து வெளியிட்ட அமெரிக்க செயலாளர் Antony Blinken  “அமெரிக்கா இந்தியாவுடன் உறவினை ஏற்படுத்துவதற்கு முன்னரே இந்தியா ரஷ்யாவுடன் மிக நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வருகின்றது”.

இப்போது தான் அமெரிக்கா இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியிலான உறவினை ஏற்படுத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றமையானது இந்தியாவை எதிர் காலத்தில் ரஷ்யாவிடமிருந்து பிரித்து ஆளுகை செய்யும் மறைமுக செயற்பாடாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Videos