Thursday, May 9, 2024
HomeLatest News19 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

19 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கான வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீரியல்வளத்துறையினரினால் 19 பேருக்கு எதிராகவும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறை தண்டனைப்படி 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதை பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்தார்.

கடந்த 3ஆம் மாதம் 28ஆம் திகதி படகு ஒன்றில் நான்கு மீனவர்களும், மூன்றாம் மாதம் 30ஆம் திகதி ஒரு படகில் மூன்று மீனவர்களும், இம் மாதம் 2ஆம் திகதி ஒரு படகில் 12 மீனவர்களுமாக 19 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதில் 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதனால் அப்படகு அரசுடமையாக்கப்பட்டது.

மற்ற இரண்டு படகின் உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் 15.07.2022 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent News