Friday, April 26, 2024
HomeLatest Newsபசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தீர்மானம்?

பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய தீர்மானம்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தனது இரட்டை குடியுரிமையை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ளதாக உயர்மட்ட அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச தனது இந்த முடிவை அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்ற ஷரத்து அடங்கிய 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அமைச்சரவையில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டதை அடுத்து பசில் ராஜபக்ச தான் வகித்து வந்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் அமெரிக்கா மற்றும் இலங்கையின் குடியுரிமைகளை கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

எனினும் இதன் பின்னர், தனது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களின் பின்னர், இரட்டை குடியுரிமை இரத்துச் செய்து விட்டு, இலங்கையில் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துக்கொள்வார் என கூறப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்தனர்.

இதனையடுத்து அமைச்சர்களக பதவி வகித்த ராஜபக்சவினர் அனைவரும் பதவி விலகினர். இதனையடுத்து பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்சவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Recent News