Thursday, May 2, 2024

சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனா..!

சீனாவில் முதன் முறையாக ஒரு சாதாரண குடிமகன் உள்ளடங்கலாக 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு அடுத்தபடியாக தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய 3 ஆவது நாடு என்ற பெருமையை சீனா பெறுகின்றது.

400 கி.மீ. உயரத்தில் உள்ள தனது விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முடிவு செய்த சீனா அதற்காக விண்வெளி துறையில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளது.

அந்த அடிப்படையில், நேற்றைய தினம் காலை சீனாவின் ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்திலிருந்து ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது. இது சீனாவின் 4 ஆவது மனித விண்வெளி பயணமாக காணப்படுகின்றது.

ஆனால் இந்த தடவை முதன் முறையாக ஒரு சாதாரண குடிமகன் உட்பட 3 பேரை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.

ஷென்சோ-16 என்ற செயற்கை கோளானது 10 நிமிடம் கழித்து ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.

செயற்கைகோள் ஏவுதல் பணி முழு வெற்றி பெற்றுள்ளதாகவும் அத்துடன் 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமன்றி, இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos