Tuesday, May 7, 2024

பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்துமா?

கோவிட் அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில் பயணங்களைக் குறைக்குமாறு பயணிகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

கோவிட் அபாயத்தைக் குறைக்கும் முயற்சியில் பயணங்களைக் குறைக்குமாறு பயணிகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) வெடித்துள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீனவின் போக்குவரத்து துணை அமைச்சர் சூ செங்குவாங், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இன்று சீனாவின் போக்குவரத்து அமைச்சகம் (வெள்ளிக்கிழமை ஜனவரி 6) வெளியிட்ட கோவிட் அறிவுறுத்தல்களில், மக்கள் பயணங்களையும் கூட்டமாக ஓரிடத்தில் கூடுவதையும் குறைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது, குறிப்பாக சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள் மிகவும் அவசியமாக இருந்தால் தவிர, வெளியே வர வேண்டாம் என்று சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மாதம் புத்தாண்டை ஒட்டி, மக்கள் பயணங்களை அதிகரித்துவிடக்கூடாது என்ற அச்சத்தில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, சீனாவில் கோவிட் நோய் அதிகரித்திருக்கும் நிலையில், பெரிய அளவில், கோவிட் பரவுவதற்கானவாய்ப்பைக் குறைக்க அரசாங்கம் முயல்கிறது என்று அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

சீனா தற்போது கோவிட் நோய்த்தொற்றுகளில் திடீர் அதிகரிப்பைக் கண்டு வருவதால், அந்நாட்டில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அனுமானிக்கப்படுகிறது. அதிகரித்து வரும் கொரோனாத் தொற்று, நாட்டின் சுகாதார அமைப்புக்கு சுமையாவதுடன், உயிர் காக்கும் மருந்துகள் தேவையையும் பூர்த்தி செய்ய முடியாமல் த்விக்கிறது.

வயதானவர்களிடையே குறைந்த தடுப்பூசி விகிதம் இருப்பதும் சீனாவிற்கு சிக்கல்களை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை, லாக்டவுன், வெகுஜன சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்த சீன அரசாங்கம் திடீரென அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது.

இன்னும் இரு நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8), வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு வருபவர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தலை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவருகிறது.

சீனாவில், தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று, மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் வேகமாகப் பரவி வருவதாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. ICU படுக்கைகள் போன்ற மருத்துவ ஆதாரங்கள் இல்லாத சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு வைரஸ் பரவுவது குறித்து அரசாங்க அதிகாரிகள் அதிகக் கவலைப்படுவதாக தெரிகிறது.

Latest Videos