Sunday, May 19, 2024
HomeLatest Newsசிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நாளே இந்த சுதந்திர தினம் - விக்கி சுட்டிக்காட்டு!

சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் நாளே இந்த சுதந்திர தினம் – விக்கி சுட்டிக்காட்டு!

இலங்கையின் சுதந்திர தினத்தை வடகிழக்கு மக்கள் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே பார்ப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாளை பேரணி தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமைந்துள்ளதாகவும் ஆனால் வடகிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்றிணைந்து குறித்த நாளை கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு குறித்த நாளைப் பிரகடனப்படுத்த முன், மாணவர்கள் மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர், மதத் தலைவர்கள் போன்றோருடன் கலந்துரையாடிய பிறகே இந்தத் தீர்மானத்தை எடுத்துக்கொண்டுள்ளதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எமது மனோநிலையை மன ஏக்கத்தை உலகுக்கு வெளிப்படுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.

Recent News