Tuesday, May 21, 2024
HomeLatest NewsWorld Newsபதவியிலிருந்து நீக்கப்பட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர்..!

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர்..!

சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் எந்த விளக்கமும் இன்றி பாதுகாப்புத் துறை அமைச்சா் லீ ஷாங்ஃபு இடம் பெறாததைத் தொடா்ந்து, அவா் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


சீன ராணுவத்தின் தலைமைப் பீடமான மத்திய ராணுவ ஆணையத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆணையத்தின் துணைத் தலைவா் ஹீ வெய்ங்டாங், அரசியல் விவகாரங்களை மேற்பாா்வையிடும் அட்மிரல் மியாவோ ஹுவா, ஏவுகணைப் படைத் தலைவா் ஷாங் ஷெங்மின் ஆகிய ஆணைய உறுப்பினா்கள் பங்கேற்றனா்.


ஆனால், அந்தக் கூட்டத்தில் அவசியம் பங்கேற்க வேண்டிய பாதுகாப்புத் துறை அமைச்சா் லீ ஷாங்ஃபு கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பிலிருந்து இதற்கான எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாவோ சேதுங்குக்குப் பிறகு சீனாவின் மிக சக்திவாய்ந்த தலைவா் என்று அழைக்கப்படும் அதிபா் ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமானவரான லீ ஷாங்ஃபு, இது போன்ற முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்காதது இது முதல்முறை அல்ல.

ஏற்கெனவே, கடந்த 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் வியத்நாம் ராணுவ உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் லீ ஷாங்ஃபு கலந்துகொள்ளவில்லை.அவா் இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே
எந்தப் பொது நிகழ்ச்சியலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய ராணுவ ஆணையக் கூட்டத்திலும் அவா் பங்கேற்காதது ,
அவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே எழுந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


ஏற்கெனவே, இதே போலத்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் காங் தொடா்ந்து சில வாரங்களாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாா். அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை. அப்போதும், கின் காங் பதவியிலிருந்து அகற்றப்பட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊகத் தகவல்கள் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Recent News