Friday, May 3, 2024
HomeLatest NewsWorld Newsகறுப்பு ஜுலை கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம்..!

கறுப்பு ஜுலை கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம்..!

கறுப்பு ஜுலை என்பது 1983 ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளை குறிக்கும். 1983ம் ஆண்டு ஜுலை கலவரம் என்பது முழு நாட்டையும் பாதித்தது.

கருப்பு ஜுலைக்கான முதலாவது கலவரம் ஆரம்பமானது, 1983 ஜுலை மாதம் 23ம் தேதி. இந்த காலப் பகுதியில் இலங்கையில் 1983ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்ததுடன், அந்த காலத்தில் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சி செய்தார்.

இவ்வாறான நிலையில், கருப்பு ஜுலை கலவரம் இடம்பெற்று 40 வருடங்கள் கடக்கின்ற இன்றைய சூழலில், இலங்கையின் ஜனாதிபதியாக அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வருகின்றார்.

1983 ஜுலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தன.

இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது,150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது.

பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.

இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர், மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர்.

கறுப்பு யூலை என்பது பொதுவாக தமிழ் போராளிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஜுலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதம் ஆனது.

1983ம் ஆண்டு ஜுலை கலவரத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வில் இந்த கலவரத்தில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் எனவும் அவர்களை நினைவு கூர அனுமதிக்க கூடாது எனவும் கூறி அமைதியின்மை ஏற்பட்டது.

கருப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News