Friday, March 29, 2024
HomeLatest Newsரணிலுக்கு ஆதரவு: தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு

ரணிலுக்கு ஆதரவு: தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் அவர் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் எவ்விதமாக செயற்படுவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இருவேறு நிலைமைகள் எழுந்துள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடம் வியாழக்கிழமை மெய்நிகர் வழியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் புதிய பிரதமர் நியமனம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சமயத்தில், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையற்றவர். ஆவரை மக்கள் ஆணை மீளப்பெறப்பெற்றுக்கொண்ட ஒருவர் நியமித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்ட கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும், பிரதமர் ரணில் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை.

அதேநேரம், மக்கள் நலன்சார்ந்து நல்ல விடயங்கள் முன்னெடுத்தால் அவற்றுக்கு தடையாக இருக்கப்போவதில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளர். இந்தக் கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

எனினும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் எமது கட்சி எவ்விதமான நிலைப்பாடுகளையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி மீண்டும் பேசவுள்ளோம். அதன் பின்னர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளேன்.

கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு அல்லது ஒருங்கிணைப்புக்குழு கூடி இறுதி முடிவினை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமந்திரன் நல்லாட்சி காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர். அதன் பின்னரும் அவருடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தவர்.

தற்போது அவருக்கு எதிரான நிலைப்பாட்டை ஏன் எடுத்துள்ளார் என்று தெரியவில்லையென குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவர்கள் தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதென்று ஏகோபித்த முடிவினை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு எடுத்துள்ளது. இதனை மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

எனினும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News