Saturday, May 18, 2024
HomeLatest Newsமியன்மார் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம்: போர் வெடிக்கும் அபாயம்

மியன்மார் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றம்: போர் வெடிக்கும் அபாயம்

மியன்மார் மற்றும் பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் சிறு சிறு மோதல் சம்பவங்கள் பாரிய போராக மாறக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதமளவில் பங்களாதேஸின் எல்லைப் பகுதியில் மக்களை மியன்மார் இராணுவம் கொன்றதாக கூறி மியன்மார் இராணுவத்தின் மீது ‘அரக்கான்’ இராணுவம் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருந்தது.

இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை நடத்திய மியன்மார் இராணுவம் தாக்குதலுக்கு கனரக ஆயுதங்களை பயன்படுத்தியது. தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் ‘அரக்கான்’ இராணுவம் எல்லைகளில் கடுமையான பதற்றமான சூழல்களை உருவாக்கியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் இரண்டு தரப்புக்களிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் 10ற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 20ற்கும் மேற்பட்ட காவல் துறையினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி மோதல்களில் மியன்மார் இராணுவம் போர் விமானங்களையும், உலங்கு வானூர்திகளையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதுடன், அரக்கான் இராணுவம் பீரங்கி மற்றும் ஆட்லரி ஆயுத தளபாடங்களையும் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த மோதல் பாரிய போராக வெடிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அத்துடன் மியன்மார் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கிடையிலான எல்லைப் போராகவும் மாறக் கூடிய வாய்ப்புக்கள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக உலக அமைப்புக்கள் தலையிட்டு மேற்படி பதற்றமான சூழலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என சர்வதேச செய்தி ஊடகங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

Recent News