Monday, May 6, 2024
HomeLatest Newsஇலங்கையில் குறைவடையும் எரிபொருள் விலை! – வெளியான முக்கிய செய்தி

இலங்கையில் குறைவடையும் எரிபொருள் விலை! – வெளியான முக்கிய செய்தி

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அதிகளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உலக சந்தையில் WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 78 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 டொலராக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் விலை சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், இறுதியாக கடந்த ஜுலை மாதம் 17 ஆம் திகதியே விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எரிபொருள் விலையை குறைப்பதற்கு தயாராக இருப்பதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா, இதற்கான தீர்மானம் வலுசக்தி அமைச்சின் ஊடாகவே மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் உள்ளூர் சந்தையில் அதனை நேரடியாக பிரதிபலிக்க முடியாது.

தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் கடந்த காலங்களில் அதிக விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டன.

வெளிநாட்டு நாணய நெருக்கடி எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக நாணய கடிதங்களை விடுவிப்பதில் சிரமங்களுக்கு வழிவகுத்ததாகவும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

Recent News