Friday, February 14, 2025
HomeLatest Newsதொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரும் கோட்டா!

தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரும் கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் 14 ஆம் திகதி மாலைதீவு ஊடாக அவர் சிங்கப்பூருக்குப் பயணமாகியிருந்தார்.

இதன்போது அவருக்கு 14 நாட்களுக்கு வீசா வழங்கப்பட்டிருந்ததுடன் இலங்கையர்களுக்கான சலுகைகளுக்கு அமைய குறித்த வீசா மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் சிங்கப்பூர் வீசா காலம் எதிர்வரும் 11 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் இவ்வாறு குறித்த காலப்பகுதியை மேலும் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வீசா காலத்தை 14 நாட்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோரிக்கைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த மாத இறுதி வரை சிங்கப்பூரில் தங்கியிருக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News