Friday, March 29, 2024
HomeLatest Newsவெளிநாட்டை நோக்கிய இடம்பெயர்வுகள் தீவிரம்-உச்சத்தை தொட்ட கடவுச்சீட்டுக்கள்!

வெளிநாட்டை நோக்கிய இடம்பெயர்வுகள் தீவிரம்-உச்சத்தை தொட்ட கடவுச்சீட்டுக்கள்!

இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 192 கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்பட்டன.

அந்தவகையில் இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் கடவுச்சீட்டு வழங்கல் 33 வீதத்தால் அதிகரித்து 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டுக்காக மொத்தம் ஒரு இலட்சத்து ஆயிரத்து 777 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அதில் 98 ஆயிரத்து 124 பேருக்கு மாத்திரமே கடவுச்சீட்டுக்களை வழங்க முடிந்துள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

திணைக்கள வரலாற்றின்படி, அதிக எண்ணிக்கையிலான கடவுச்சீட்டுக்கள் 2016 இல் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அந்த ஆண்டில் 6 இலட்சத்து 58 ஆயிரத்து 725 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த ஆண்டின் ஏழு மாதங்களில் 5 இலட்சத்து 90 ஆயிரத்து 260 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளமையால், 2016ஆம் வருடத்தின் சாதனை முறியடிக்கப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 701 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர்.

எனினும், 2021ஆம் ஆண்டு முழுவதும் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 952 பேர் மட்டுமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காகச் சென்றுள்ளனர்.

Recent News