Wednesday, April 24, 2024
HomeLatest Newsஇலங்கையில் பசியால் வாடும் குடும்பங்கள் அதிகரிப்பு – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

இலங்கையில் பசியால் வாடும் குடும்பங்கள் அதிகரிப்பு – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி உணவுப்பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது என தெரிவித்துள்ள உலக உணவு திட்டம் உணவு மற்றும் எரிபொருள் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலையை உருவாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

உடனடி செயற்பாடுகள் இல்லாத பட்சத்தில் நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் உலக உணவு திட்டம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான தொலைதூர உணவுப்பாதுகாப்பு ஆய்வுகளின் படி மூன்றில் ஒரு பங்கு மக்கள் தற்போது கடும் உணவுப்பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு பணியின் போது காணப்பட்ட நிலையை விட இது அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ள ஐநாவின் அமைப்பு உணவு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு குறித்த பதட்டம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

43 வீதமான மக்கள் தங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என அச்சம் கொண்டுள்ளனர் என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உரிய மருந்துகள் கிடைக்குமா என கவலை கொண்டுள்ள மக்களின் வீதம் 42 லிருந்து 56 ஆக அதிகரித்துள்ளது எனவும் உலக உணவு திட்டம் குறிப்பிட்டுள்ளதுடன் நாளாந்த உணவுகள் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளன பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கின்றது.

Recent News