Thursday, May 2, 2024
HomeLatest Newsமுருங்கைக் கீரை பக்கோடா செய்வது எப்படி?

முருங்கைக் கீரை பக்கோடா செய்வது எப்படி?

உடம்பில் பல சத்துக்களை கொடுக்கும் முருங்கை கீரை, ரத்தத்தினை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கின்றது.இரும்புச்சத்து அதிகம் கொண்ட கீரையை கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முருங்கைக் கீரையை பொரியல், கூட்டு என வைத்து சாப்பிடும் நாம் அதையே, பக்கோடாவாக செய்து சாப்பிடலாம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது முருங்கைக் கீரை பக்கோடா எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்


கடலை மாவு – 200 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

முருங்கைக் கீரை – 2 கைப்பிடி அளவு

நறுக்கிய பச்சை மிளகாய் – 2

நெய் – ஒரு டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

Recent News