Friday, May 3, 2024
HomeLatest News‘எங்கள் வளத்தை சுரண்டாதே’ வாகரை இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்து வேட்டை!

‘எங்கள் வளத்தை சுரண்டாதே’ வாகரை இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்து வேட்டை!

‘எங்கள் வளத்தை சுரண்டாதே’ என்ற தொணிப்பொருளில் நீதி வேண்டும் என வாகரை பிரதேசத்தில் இறால் வளர்ப்பு திட்டத்தை இரத்துச் செய்யக் கோரி பிரதேச மக்கள் கையெழுத்து வேட்டை போராட்டத்தினை இன்று வாகரையில் மேற்கொண்டனர்.

தட்டுமுனை, புளியங்கண்டலடி, அம்பந்தனாவெளி, பால்சேனை, கதிரவெளி, கட்டுமுறிவு போன்ற இடங்களில் மக்கள் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமது கையொப்பத்தினை இட்டனர்.

இதில் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டு தமது கையொப்பத்தினை பதிவிட்டனர்.

மேற்படி போராட்டத்தினை பிரதேச மீனவர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் சங்கங்கள், பண்ணையாளர்கள், ஆலய அமைப்புக்கள், p2p மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இத்திட்டத்தை தடைசெய்யக்கோரி பிரதேச மக்கள் கிளர்தெழுந்து வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக செயலக கதவினை பூட்டிவைத்து கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, இருசாராருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து மேற்கொள்ளும் நில அளவையினை இடை நிறுத்தி தருவதாகவும் கலந்துரையாடலின் போது பிரதேச செயலக நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தெரிவிக்கப்பட்ட கருத்தில் மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

கடந்த சில தினங்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரால் உதவித் திட்டங்கள் பெற்றுத் தருவதாக கூறி, மக்களிடம் இத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்தே ஜனாதிபதியின் கவனத்திற்கும் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் தாங்களும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஆரம்பிக்கப்படும் இறால் வளர்ப்பு பண்ணை தொடர்பாக மக்கள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வாகரை பிரதேசத்தின் “இதயம் பேசுகிறது” என்ற தலைப்பில் விநியோகிக்கப்பட்டன.

வாகரை தட்டுமுனை தொடக்கம் கட்டுமுறிவு வரையான சுமார் 950 கெக்ரயர் அளவு கொண்ட ஆற்று களப்பு பிரதேசங்களில் இறால் பண்ணை அமைக்கும் நடவடிக்கைக்கு காணி தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர்களை கொண்டு காணி அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாகவுள்ளதாகவும், அவர் இத் திட்டத்தினை கைவிடவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recent News