Thursday, May 16, 2024
HomeLatest Newsஇலங்கையில் மிகப்பெரிய கார் ரேஸ்

இலங்கையில் மிகப்பெரிய கார் ரேஸ்

இலங்கை ஆட்டோமொபைல் சம்மேளனத்திற்கு போட்டிகளை நடத்துவதற்கான தடத்தை உருவாக்குவதற்கு பொருத்தமான காணியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

சர்வதேச சம்மேளனத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களுக்கு அமைவாக பாதை அமைப்பதற்கு பொருத்தமான காணியை வழங்க முடியும் எனவும், அதற்கான முன்மொழிவை உடனடியாக தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஆட்டோமொபைல் சம்மேளனத்தின் அதிகாரிகளுடன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் எதிர்வரும் போட்டிகளுக்கான தயார்படுத்தல்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை ஆட்டோமொபைல் சம்மேளனத்திற்கு இது மிகவும் வரலாற்று தருணம் என அதன் தலைவர் தெரிவித்தார். இங்கு கார் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் உள்ள சிரமம் குறித்து கூட்டமைப்பின் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. மோட்டார் கார் பந்தயப் போட்டிகள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், மோட்டார் பந்தயப் போட்டிகளை விளம்பரப்படுத்த தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களுக்கு பணம் கொடுப்பதற்குப் பதிலாக, அந்தப் போட்டிகளின் காட்சி உரிமையை தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதிக்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

ஆண்டு முழுவதும் மோட்டார் கார் பந்தயப் போட்டிகளை அதிக அளவில் ஏற்பாடு செய்யுமாறும், குறிப்பாக சுற்றுலாத்துறையை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆலோசகர் சுதத் சந்திரசேகர, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, விளையாட்டு பணிப்பாளர் நாயகம் அமல் எத்ரிசூரிய, இலங்கை ஆட்டோமொபைல் கூட்டமைப்பின் தலைவர் அஷ்வர் ஹமீம், அதன் செயலாளர் ஷெஹான் ஏ டி திசேரா மற்றும் பொருளாளர் உபுல்வன் சேரசிங்க உட்பட அதிகாரிகள் குழு கலந்துகொண்டனர்.

Recent News