Wednesday, June 26, 2024
HomeLatest NewsWorld Newsநிலவில் புதிய விண்கலத்தைக் களமிறக்கிய சீனா! பாறை, மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டம்!

நிலவில் புதிய விண்கலத்தைக் களமிறக்கிய சீனா! பாறை, மண் மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர திட்டம்!

ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங் நேரப்படி (2223 GMT) காலை 6:23 மணிக்கு, சீனாவின் விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு எடுத்துவரும் திட்டத்துடன் புதிய விண்கலத்தை சீனா நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. உள்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6:23 மணிக்கு சாங்-6 (Chang’e-6) விண்கலம் நிலவை எட்டியது.

சாங்-6 விண்கலம் தரையிறங்கியுள்ள இடம் நிலவின் தென் துருவ பகுதி ஆகும். இது நிலவின் மேற்பரப்பில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத பகுதியாக உள்ளது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், நீண்ட கால விண்வெளி பயணங்கள் மூலம் நிலவின் இருந்து கனிமங்களை எடுத்துவர முயலும் நிலையில் சீனா அந்த முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.சீனாவின் தெற்கு தீவான ஹைனானில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சீனாவின் லாங் மார்ச்-5 ராக்கெட் மூலம் சாங்-6 விண்கலம் ஒரு மாதத்திற்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டது.

“சாங்-6 திட்டத்தின் நோக்கம் நிலவின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளுடன் திரும்புவது ஆகும். இந்தத் திட்டம் பல பொறியியல் கண்டுபிடிப்புகள், அதிக ஆபத்துகள் மற்றும் பெரும் சிரமங்களை உள்ளடக்கியது” என்று சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது நிலவின் தென்துருவப் பகுதியில் சீனாவின் இரண்டாவது வெற்றிகரமான தரையிறக்கம் ஆகும். இரண்டாவது முறையாக நிலவில் மென்மையான தரையிறக்கம் செய்திருப்பது வேறு எந்த நாடும் செய்யாத சாதனையாகும். நிலவின் ஒரு பகுதி எப்போதும் பூமியிலிருந்து விலகியே உள்ளது. இது நிலவில் தகவல்தொடர்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக அமைகிறது.

Recent News