Saturday, May 18, 2024
HomeLatest NewsWorld Newsகாஸாவுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு கடற்படை கப்பலை அனுப்பி வைத்துள்ளது பிரிட்டன்..!

காஸாவுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு கடற்படை கப்பலை அனுப்பி வைத்துள்ளது பிரிட்டன்..!

இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அதையடுத்து அந்த அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதாகக் கூறி காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும்,தரைவழியாகவும் தீவிரமாக தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின்
எண்ணிக்கை இதுவரை 33 அயிரத்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா் என்று காஸா அதிகாரிகள் கூறினா்.

இதனிடையே, காஸாவுக்கு ஆதரவாக தங்கள் நாட்டு கடற்படை கப்பலை அங்கு அனுப்பி வைத்துள்ளது பிரிட்டன்.காஸாவில் உள்ள குழந்தைகள் பசியால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,பச்சிளங் குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய உணவு கூட கிடைக்காமல் தாய்மார்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரணப் பொருட்களை நம்பியே அவர்கள் வாழ்கின்றனர்.

இந்த நிலையில், கடல்வழியாக காஸாவுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்ல ஏதுவாக சிப்ரஸிலிருந்து காஸா வரை சர்வதேச கடல்வழித்தடத்தை ஏற்படுத்த பிரிட்டன் கடற்படை உதவிகளைச் செய்யும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் தவிக்கும் மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் விரைவில் சென்றடைய இவ்வழித்தடம் பேருதவியாக அமையப்போகிறது. இதற்காக பிரிட்டன் அரசு 9.7 மில்லியன் யூரோ தொகையை(இந்திய ரூபாய் மதிப்பில் 87.5 கோடிக்கும் மேல்) ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி பிரிட்டன் விமானப்படை மூலம் 40 டன்னுக்கும் அதிகமாக குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உள்பட தண்ணீர், மாவுப் பொருட்கள் அடங்கிய பல்வேறு உணவுப் பொருட்கள் காஸாவுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரை வழியாக கடந்த மார்ச் 13 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, பிரிட்டனிலிருந்து ஜோர்டான் வழியாக 2000 டன்னுக்கும் அதிகமான உணவுப் பொருட்கள் காஸா மக்களை சென்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News